கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளம் வயதினர் கூட, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது போல் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

19 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்படும் போது, 10-ல் 4 பேருக்கு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலையின் போது, பிரிட்டனில் இருக்கும் 302 மருத்துவமனைகளில் அனைத்து வயது வரம்பைச் சேர்ந்த 73,197 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

“இது வெறுமனே வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கான நோய் அல்ல என்பது தான் செய்தி” என்கிறார் பேராசிரியர் கலும் செம்பில். இவர் தான் இந்த ஆய்வை தலைமை தாங்கி வழிநடத்தியவர்.

“கொரோனா வெறுமனே ஒரு ஃப்ளூ காய்ச்சல் அல்ல. பல இளம் வயதினர் கூட சிக்கலான உடல் உபாதைகளோடு மருத்துவமனைக்கு வருவதை நாங்கள் பார்க்கிறோம். அதில் சிலரை எதிர்காலத்திலும் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்க வேண்டி இருக்கிறது. இதைத் தான் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்கிறார்.

இந்த ஆய்வு பிரிட்டனின் ஏழு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. கொரோனாவின் போது சிக்கலான உடல் உபாதைகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இங்கிலாந்தின் சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களை தனியாகக் குறிப்பிட்டது.

By Anna